தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நாய்கள் குரைக்கும் சத்தம், சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் மிச்ச உணவு காரணமாக மற்ற குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு சங்கத்திற்கு மாற்றம் நடந்ததிலிருந்து இந்த பிரச்சினை நிலவுவதாக நிர்வாக குழுவினர் கூறினர். “நாங்கள் அவரிடம் தடுப்பூசி சான்றிதழ்கள் கேட்டு பலமுறை அவகாசம் அளித்தோம். குழு உறுப்பினர்கள் நேரில்சென்று ஆலோசனையும் வழங்கினர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, நாங்கள் அபராதம் விதிக்க வேண்டிய நிலைக்கு வந்தோம்,” என குழு உறுப்பினர் என்.எஸ். ஃபதேராம் தெரிவித்தார். கூடுதலாக, சங்கத்தினர் அவருக்கு தனது நாய்களை மாற்றுவதற்காக அருகிலுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கக் கூட முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பட்டாச்சார்யா மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, சுபாஜித் பட்டாச்சார்யா, “என் எல்லா நாய்களுக்கும் தடுப்பூசி போட்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் சான்றிதழ்கள் வழங்கினேன், ஆனால் அவை செல்லப்பிராணிகள் அல்ல; மீட்கப்பட்ட விலங்குகள். எனவே, பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் எனக்கில்லை” என கூறினார். அவரது சார்பில், ‘தூய விலங்கு காதலர்கள்’ அறக்கட்டளை வழக்கறிஞர் மூலம் சட்டபூர்வமாக அபராதத்தை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், மும்பையில் மட்டுமே நாய்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதனால் தானே நகராட்சியில் பதிவு இல்லை என்பது வழக்கமான நிலை எனவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.