மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் தேனிலவுக்காக சென்ற இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி இருவரும் கடந்த வாரம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜா ரகுவன்ஷியின் சடலம் மீட்கப்பட்டது. அதேவேளையில், அவரது மனைவி சோனம் காணாமல் போனார். பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில், சோனம் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசிபூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை கூடுதல் எஸ்பி ஞானேந்திர பிரசாத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது வரை, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண் குற்றவாளி தானாகவே காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். இன்னும் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும், அவரை தேடும் பணி தொடர்கிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் வெறும் 7 நாட்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தமது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். காவல்துறையின் வேகமான நடவடிக்கையை அவர் பாராட்டியதோடு, இந்த வழக்கில் நீதிகிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜாவின் மரணம் மற்றும் சோனத்தின் மீட்பு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தூரில் இருந்து வந்த இத்தம்பதியின் தேனிலவுப் பயணம் ஒரு கொலை வழக்காக மாறியிருப்பது அரசியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.