
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 51 வயதான ஒரு பெண் காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நோயானது ஜூனோடிக் வைரஸ் என்பதாலும், ஒட்டுண்ணி (ticks) மூலமாக பரவுவதாலும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பாசிட்டிவ் கண்டறியப்பட்ட அவர், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பரவலாக உள்ள இடங்களில் விரைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், மக்களை விழிப்புணர்வு செய்யவும் மாநில சுகாதார துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்துக்கிடமான நோயாளிகளை தனிமைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் காங்கோ காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் நோயின் அறிகுறிகள் தென்படுவோரிடமிருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.