சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புதிதாக போடப்பட்ட வேகதடையை பிரகாசம் கவனிக்கவில்லை. இதனால் ஷேர் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது வேகத்தடையில் ஏறி ஆட்டோ கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரகாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.