உஸ்பெகிஸ்தானுக்குத் தாம் நான்காவது முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் ஆழத்தையும் நெருக்கத்தையும் பறைசாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் சுமார் பத்து முறை சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதிபரின் நேர்மையான அணுகுமுறையும், தொலைநோக்குப் பார்வையும் தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் மீது அவர் கொண்டுள்ள மாராத நட்புக்கும் அர்ப்பணிப்புக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் உரித்தாக்கினார்.
மத்திய ஆசியாவின் முக்கிய மையப் புள்ளியாகவும், இப்பகுதியில் இந்தியாவின் தொடர்புகளின் முதன்மை வாயிலாகவும் உஸ்பெகிஸ்தான் விளங்குவதாகப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இரு நாடுகளின் சிந்தனைகளிலும் இலட்சியங்களிலும் மாபெரும் ஒற்றுமை நிலவுவதைக் குறிப்பிட்ட அவர், இளைஞர்கள், நவீன கண்டுபிடிப்புகள், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை இரு நாடுகளின் மிக முக்கியமான தூண்களாகத் திகழ்வதாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான மூலோபாயக் கூட்டாண்மை தற்போது ‘விரிவான மூலோபாய கூட்டாண்மையாக’ உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 1 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்து வெற்றிகரமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, வரவிருக்கும் 2030-ஆம் ஆண்டுக்குள் இதனை 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற மாபெரும் புதிய இலக்கை நிர்ணயத்துள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டும் பொருட்டு, சந்தை அணுகல், போக்குவரத்து இணைப்பு, வங்கி மற்றும் டிஜிட்டல் பணப்ப பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து தீவிரமாகச் செயல்படும் என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
