சென்னையை உலுக்கிய கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கில் ஒரு திகில் திருப்பம் அரங்கேறியுள்ளது. ரயில் பெட்டியில் உறைந்த ரத்தத்துடன் மீட்கப்பட்ட துண்டு துண்டான உடல் யாருடையது? கொடூரச் செயலுக்குப் பின்னால் இருந்த அந்த பகீர் பின்னணி என்ன? என்ற காரணங்கள் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆக்ரா ரயில் நிலையத்தை அடைந்தபோது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த பயணிகள் மற்றும் அரசு ரயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது உறைந்து போயினர். அதற்குள் தலை துண்டிக்கப்பட்டு, உடல் பாகங்கள் பல துண்டுகளாக வெட்டி திணிக்கப்பட்டிருந்தன. அது ஒரு பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா (38) என்பது உறுதியானது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சூட்கேஸை ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து கொண்டு சென்றது பதிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரியில் வாடகைக்கு குடியிருந்த வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கே சோதனையிட்டபோது, ஒரு பெரிய சமையல் பாத்திரத்திற்குள்ளும் பெண்ணின் மேலும் சில உடல் பாகங்கள் வெட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் அதிரச் செய்தது. ஆரம்பத்தில் ‘பெண் காணாமல் போனது’ என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, உடனடியாக கொடூர கொலை வழக்காக மாற்றப்பட்டது. போலீசாரின் விசாரணையில் இந்த கொடூக் குற்றத்திற்குப் பின்னால் ஒரு பகீர் காதல் விவகாரம் இருப்பது அம்பலமானது.

கொலை செய்யப்பட்ட ஹயாத்துன் நிஷாவுடன், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர் (22) என்பவருக்குத் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நிஷா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் மாணிக் உத்தீனின் மனைவியான பகாபதி மாஜிக்கு தெரியவந்துள்ளது. பின்னர்  கணவனும் மனைவியும் இணைந்து ஹயாத்துன் நிஷாவைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படியே அந்தப் பெண்ணை கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸிலும் பாத்திரத்திலும் அடைத்து நாடகமாடியுள்ளனர். மேலும் தலையை வெட்டி வெளியே ரத்தம் போகாமல் இருக்க பிரியாணி அண்டாவில் பிடித்து சதைகளை வேக வைத்ததோடு எலும்பை சூட்கேசில் வைத்து வீசியதாக கூறியுள்ளனர்.

கொலை அரங்கேறியதும் தலைமறைவான தம்பதியரைப் பிடிக்க சென்னை காவல் துறை தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கின. மாநிலங்களைத் தாண்டித் தேடியதில், மணிப்பூர் மாநிலம் காஷிம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியரை மணிப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ‘டிரான்சிட் வாரண்ட்’ பெற்று தாம்பரத்திற்கு அழைத்து வரத் காவல்துறையினர் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.