அசாம் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் போது பெண் ஆசிரியை ஒருவர் தனது இரண்டு இரட்டைக் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று வீடு வீடாகச் சென்று களப்பணியாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரூமி தேகா என்ற அந்த ஆசிரியை ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடியும், மற்றொரு குழந்தையின் கையைப் பிடித்தபடியும் வீடுகளுக்குச் சென்று தரவுகளைச் சேகரித்துள்ள காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடுமையான வெயில் மற்றும் நீண்ட தூரப் பயணச் சூழல்களுக்கு நடுவிலும் தனது அலுவல் கடமையைச் சிறிதும் குறைவின்றி நிறைவேற்றிய அவரது அர்ப்பணிப்புப் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
View this post on Instagram
இந்தச் சம்பவம் குறித்துப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வந்த நிலையில், அவரது கணவர் தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு நிலைமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வழக்கமான பள்ளிக் பணிகளிலிருந்து இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முற்றிலும் மாறுபட்டவை என்றும், வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததால் வேறு வழியின்றி அவர் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல நேர்ந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், ஒரு சிறிய காணொளியை வைத்து மட்டும் ஒட்டுமொத்தச் சூழலையும் தவறாக மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் முழு அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த முறை முற்றிலும் டிஜிட்டல் முறையில் கைப்பேசி செயலிகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேசிய அளவிலான பெருமுயற்சியில் அடிமட்டத்தில் களமிறங்கிச் செயலாற்றும் ஏராளமான பணியாளர்களின் கடின உழைப்பை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், இணையத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
