ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கும் நோக்கத்துடன், ‘பொருளாதார டி-டே’ என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தீவிர திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறுகையில், ஈரானில் எஞ்சியுள்ள அனைத்து பொருளாதார கட்டமைப்புகளையும் உலகளாவிய வர்த்தகத்திலிருந்து துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கையாக இந்தத் தடைகள் அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதி வழியாகவோ ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரப் போருக்கு ஆதரவு அளிக்கும் அல்லது அதில் பங்கேற்கும் எந்தவொரு நாடும், ஈரான் மீது போர் தொடுப்பதற்கு இணையாகக் கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளும், ஈரானின் நேரடி எச்சரிக்கையும் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகள் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால் உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.