உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான க்ரிவி ரிஹ் (Kryvyi Rih) பகுதியில் உள்ள ஒரு மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிக வளாகத்தைக் குறிவைத்து, ரஷ்ய ராணுவம் திடீரென ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் அரங்கேறிய இந்த கொடூரத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 22 குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ட்ரோன் வந்து விழுந்த வேகத்தில் வணிக வளாகம் முழுவதும் பெரும் தீப்பிழம்புகள் எழும்பி, அப்பகுதி முழுவதையும் புகைமண்டலமாக மாற்றியது. இதனால் அங்கு வந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அப்பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரச் சம்பவத்தை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ எனக் கூறி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிற்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
