மகாராஷ்டிராவில் நடந்துள்ள ஒரு துயரச் சம்பவம், பெற்றோர்களின் தவிப்பு எத்தகையது என்பதையும், வாழ்க்கையின் ஒரு நொடி கோபம் எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதையும் ரத்தமும் கண்ணீருமாக உணர்த்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாநகர் மாவட்டத்தில், சிறுவன் ஒருவனின் சின்ன கோபத்தால் அவனது ஒட்டுமொத்த குடும்பமும் மண்ணுக்குள் மறைந்துபோன நெஞ்சை உறைய வைக்கும் சோகம் அரங்கேறியுள்ளது.

அதாவது ஜால்டா பாட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் முரளிதரன் சந்த்குடே (48) – சங்கீதா தம்பதியினர். இவர்களது 19 வயது மகன் குணால் சந்த்குடே. சம்பவத்தன்று தனக்கு ஒரு புதிய மொபைல் போன் வேண்டும் என்று குணால் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், பெற்றோர் உடனடியாக வாங்கித் தர மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால் கடும் கோபமும் விரக்தியும் அடைந்த குணால், தற்கொலை செய்துகொள்ளும் தீவிர முடிவோடு வீட்டின் அருகில் இருந்த ஒரு குன்றின் உச்சிக்குச் சென்றுள்ளார். மகன் குன்றின் உச்சியில் நிற்பதைப் பார்த்த பெற்றோரும்,மக்களும் பதறிடித்து ஓடிச் சென்றுள்ளனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, கீழே வலை விரிக்கும் முயற்சிகளும் நடந்தன. மகனைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தை முரளிதரன், குன்றின் உச்சிக்கு அருகே சென்று அவரிடம் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.

 

ஆனால், திடீரென குணால் மலையிலிருந்து குதித்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் மகனைக் காப்பாற்றும் வெறியில் தந்தையும் பின்னாடியே குதித்தார். மகனும் தந்தையும் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற தாயும், என்ன செய்வதென்று தெரியாமல் அந்த மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். ஒரு சாதாரண மொபைல் போனுக்காகத் தொடங்கிய சிறுவனின் விபரீத பிடிவாதம், ஒரு நொடியில் தாயும் தந்தையையும் சேர்த்து மூன்று உயிர்களைப் பறித்துள்ள சம்பவம் அந்தப் பகுதியையே சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.