குஜராத் மாநிலம் சூரத் நகரில், பணத் தகராறு காரணமாக நபர் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் வலம் வந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

சூரத் நகரின் பாண்டேரா பகுதியில்  இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு இளைஞரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தகராறில் ஈடுபட்ட 42 வயது நபர், திடீரென ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான வாளை உருவி அந்த இளைஞரை மிரட்டியுள்ளார்.

நடுரோட்டில் நபர் ஒருவர் கையில் வாளுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்த இந்தச் செயல், அந்தப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

 

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து காவல் துறையினர் உடனடியாக சுதாகரித்துகொண்டனர். வைரலான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வீடியோவில் வாளுடன் மிரட்டிய நபரைத் துரிதமாக அடையாளம் கண்டனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் லால்மன் மௌரியா (42) என்பது தெரியவந்துள்ளது. அவர் குஜராத்தில் தொலைக்காட்சி பழுது பார்க்கும் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூர்மையான ஆயுதத்தைக் காட்டி மிரட்டல் விடுத்தது மற்றும் பண வசூலில் ஈடுபட்டது தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைச் சிறையில் அடைத்தனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்று ஆயுதங்களைப் பயன்படுத்துவோர் மீதும், கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.