மராட்டிய மாநிலம் கொல்ஹாப்பூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சனிக்கிழமை காலை சோகமான சம்பவம் நடந்தது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள MSRTC பணிமனையில் பணியாற்றி வந்த பாண்டுரங் அன்னப்பா சவான் என்ற ஊழியர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் MSRTC-யில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபத்தில் பணிமனைப் பணிக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சம்பவம் காலை சுமார் 11 மணியளவில்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு ரேம்ப் அருகே தனது பணியை முடித்துவிட்டு பாண்டுரங் சவான் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பழுதுபார்ப்பதற்காக மற்றொரு MSRTC ஓட்டுநரான சிகந்தர் மானேர் பேருந்தை முன்னோக்கி இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் கீழ் சவான் சிக்கினார்.

 

பேருந்து ரேம்ப் வழியாக நகர்த்தப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் சம்பவத்தைப் பார்த்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். ஆனால் அதற்குள் பாண்டுரங் சவான் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும்  போலீசார் பணிமனைக்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பஞ்சநாமா மேற்கொண்டனர்.

இந்த விபத்து பணிமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தை முன்னெச்சரிக்கை அல்லது சிக்னல் இல்லாமல் நகர்த்தியதாக சவானின் சக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், சவானின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினரும் சக ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.