உலகளவில் நண்பர்கள் தினம் சமீபத்தில் கொண்டாடபட்ட  நிலையில், வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற பல சுவாரசியமான நட்புகளைப் பற்றி நினைவுகூர்வது வழக்கமாகும். அந்த வகையில், பேரரசர் அக்பர் மற்றும் அவரது அரசவையின் முக்கிய ஆலோசகரான பீர் பால் ஆகிய இருவருக்கு இடையே இருந்த ஆழமான நட்பு இன்றளவும் பலராலும் சிலிர்ப்புடன் பேசப்படும் ஒன்றாகும். ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு எவ்வாறு தொடங்கியது என்பது பலருக்கும் தெரியாத சுவாரசியமான பின்னணியைக் கொண்டது.

தொடக்கத்தில் பீர் பாலின் இயற்பெயர் ‘மகேஷ் தாஸ்’ என்பதாகும். இவர் ஒரு சாதாரண ஏழைக் கவிஞராகவே தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒருமுறை, மன்னர் அக்பரின் அரசவைக்குத் தனது கவிதைகளைச் வாசித்துக் காட்டுவதற்காக மகேஷ் தாஸ் வருகை புரிந்தார். அப்போது அவர் இயற்றிய கவிதைகளின் நயமும், அதில் வெளிப்பட்ட நுட்பமான கருத்துகளும் பேரரசர் அக்பரை மிகவும் கவர்ந்தன. மகேஷ் தாஸின் புலமையைக் கண்டு வியந்த அக்பர், அவரை உடனடியாகத் தனது அரசவையில் சேர்த்துக்கொண்டார்.

அவரது கூர்மையான அறிவு, நகைச்சுவை உணர்வு மற்றும் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் நொடியில் சமாளிக்கும் சமயோசித புத்தியைப் பாராட்டி, அக்பர் அவருக்கு ‘பீர் பால்’ என்ற பட்டப் பெயரைச் சூட்டினார். மேலும், தனது புகழ்பெற்ற ‘நவரத்தினங்கள்’ என்று அழைக்கப்படும் ஒன்பது முக்கிய ஆலோசகர்களில் ஒருவராகவும் அவரை நியமித்தார். அரசவையில் நாளுக்கு நாள் பீர் பாலின் புத்தி கூர்மையும் நேர்மையும் அக்பருக்கு அவர் மீது இருந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்தது.

காலப்போக்கில், வெறும் மன்னர் – அதிகாரி என்ற எல்லையைத் தாண்டி, இருவருக்குள்ளும் ஒரு ஆழமான நட்பு மலர்ந்தது. அக்பரின் மனதில் எழுந்த பல சந்தேகங்களுக்கும், நாட்டின் முக்கிய முடிவுகளுக்கும் பீர் பாலின் ஆலோசனைகள் முதன்மையாக விளங்கின. ஒரு கவிதையின் மூலம் தொடங்கி, வரலாற்றுப் பக்கங்களில் பொறிக்கப்படும் அளவுக்கு உயர்ந்த அக்பர் – பீர் பாலின் இந்த அபாரமான நட்பு, உண்மையான திறமைக்கும் உணர்வுகளுக்கும் என்றென்றும் மதிப்பளிக்கும் ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.