இந்திய ரயில்வேயின் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வது என்பது எப்போதுமே பெரும் சவாலான ஒன்று. குறிப்பாகக் கோடை காலங்களிலும், கடும் வெயில் நேரங்களிலும் கூட்ட நெரிசலில் சிக்கிப் பயணிப்பது பயணிகளுக்கு நரக வேதனையைத் தரும்.

அத்தகைய ஒரு சூழலில், பயணி ஒருவர் கையாண்ட மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான யோசனை ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரயிலில் நிலவிய கடுமையான வெப்பத்தையும் வெயிலையும் தாங்க முடியாமல், அந்தப் பயணி தான் கையோடு கொண்டு வந்திருந்த சொந்த டேபிள் ஃபேனை ரயிலுக்குள் பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

ரயில் பெட்டியில் மொபைல் போன் சார்ஜ் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் மின்சார சாக்கெட்டில் தனது டேபிள் ஃபேனின் ஒயரைச் செருகி, மின்சாரத்தைப் பயன்படுத்தி ஃபேனை ஓடவிட்டுள்ளார். சுற்றியிருந்த பயணிகள் அனைவரும் வெப்பத்தால் தவித்துக்கொண்டிருக்க, இவர் மட்டும் தன் தலையின் மேல் கம்பியில் ஃபேனைக் கட்டிவிட்டு ஜாலியாகக் காற்றை அனுபவித்தபடி பயணித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் வசதிக்காகக் காத்திருக்காமல், தனது சொந்த முயற்சியிலேயே தனக்கான தீர்வைக் கண்டறிந்த அந்தப் பயணியின் சாதுரியத்தைப் பார்த்து சக பயணிகள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்துபோயினர்.

இந்த விசித்திரமான சம்பவத்தை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “இந்தியர்களின் சாதுரியமான ஐடியா திறமைக்கு ஈடு இணையே இல்லை” என்றும், “ரயில்வே துறையே வியந்து பார்க்கும் யோசனை” என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், ரயில்வேயின் மின்சார சாக்கெட்டுகளில் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற விவாதமும் ஒருபக்கம் எழுந்துள்ளது.

“>