ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பொதுவழியில் வைத்து மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, ஆடை கலைக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான அரசியல் மோதலாகவும் உருவெடுத்துள்ளது.
கடந்த ஜூலை 15-ஆம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நகராட்சி வடிகால் விரிவாக்கப் பணிகளின் போது அகற்றப்பட்ட தங்களின் பழைய ஆழ்துளைக் கிணற்றுக்கு மாற்றாக, புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி கோரி ஒரு குடும்பத்தினர் முற்பட்டபோது இந்தத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சாதாரண விவாதம் எல்லை மீறிப் போய், இறுதியில் ஒரு பெண்ணை பொது சாலையில் வைத்து ஆடை கலைத்துத் தாக்கும் அளவிற்கான வன்முறையாக மாறியுள்ளது.
A woman was stripped and assaulted during a clash between two groups in Krishna Babu Colony of Guntur, Andhra Pradesh.
According to the police, the incident stemmed from a dispute over a residential borewell, which escalated into a physical altercation. During the clash, a group… pic.twitter.com/hNsarXVWee
— Vani Mehrotra (@vani_mehrotra) July 18, 2026
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, ஜூலை 16 அன்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் கோபத்தை அதிகப்படுத்திய நிலையில், குண்டூர் மாவட்ட எஸ்பி வகுல் ஜிண்டால் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதன் அடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியின் வார்டு செயலாளர் மல்லேலா வெங்கட ரமண மூர்த்தி, அவரது மனைவி சம்பூர்ணா, மாதவி உள்ளிட்ட ஒன்பது பேர் மீது பாரதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் ஜூலை 17-ல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ரமண மூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் டிடிபி தலைமை உடனடியாக நீக்கியுள்ளது.
இவ்விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய நகராம்பாளையும் காவல் ஆய்வாளர் ஒய். சத்யநாராயணா மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது குறித்துப் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெண்களுக்கு எதிரான இத்தகைய அநாகரிகச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தவறு செய்தவர்கள் எந்த அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஆளுங்கட்சி ஆரம்பத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
