குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரால் பகுதியில், உரிமம் ரத்து செய்யப்பட்டும் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பண்ணை வீடு ஒன்றில் இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தைத் தொடர்ந்து, தீ மளமளவெனப் பரவி விபத்து நடந்த இடத்தை முழுமையாகச் சூழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.