2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ள நிலையில், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு தான் கையில் ஏந்தியிருந்த குழந்தை லமின் யமால் குறித்து அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி முதன்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். கால்பந்து உலகின் உச்சக்கட்ட இறுதிப் போட்டிக்கு இரு வீரர்களும் தயாராகி வரும் வேளையில், அவர்கள் இருவரது பழைய புகைப்படம் மீண்டும் இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. இந்த அசாத்தியமான தற்செயல் நிகழ்வு மற்றும் அதன் பின்னணியில் உள்ள நம்பமுடியாத கதை குறித்துப் பேசிய மெஸ்ஸி, இந்த ஒட்டுமொத்த விஷயமும் முற்றிலும் “பைத்தியக்காரத்தனம்” என்று விவரித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் கடந்த 2007-ஆம் ஆண்டில் பார்சிலோனாவின் புகழ்பெற்ற கேம்ப் நவ்மைதானத்தில் நடந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் புகைப்பட அமர்வின் போது  எடுக்கப்பட்டதாகும். அப்போது 20 வயதான வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்த மெஸ்ஸி, ஒரு தொட்டிலில் இருந்த குழந்தை லமின் யமாலை குளிப்பாட்டி, கைகளில் ஏந்தியபடி போஸ் கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் புகழ்பெற்ற புகைப்படத்தில் இருந்த குழந்தை, இன்று கால்பந்து உலகின் பிரகாசமான நட்சத்திரமாக வளர்ந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸிக்கே சவால் விடும் அளவிற்கு எதிரணியில் வந்து நிற்பது ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் லமின் யமாலின் தந்தை இந்த புகைப்படத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோதுதான் இது முதன்முதலில் உலகிற்குத் தெரியவந்தது. புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் முற்றிலும் உண்மையானதுதான் என்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தொண்டு நிறுவன நிகழ்வில் யமாலின் குடும்பத்தினர் தற்செயலாகப் பங்கேற்றிருந்தனர். அந்தத் தருணத்தில், மெஸ்ஸியின் கைகளில் இருந்த அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் பார்சிலோனா கிளப்பின் அசுர நாயகனாகவும், உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை ஸ்பெயின் அணியைச் சுமந்து வரும் ஒரு மாபெரும் வீரனாகவும் மாறும் என்று எவருமே கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது.

 

 

View this post on Instagram

 

A post shared by Fanatics (@fanatics)

தற்போது, 39 வயதான லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக மற்றொரு வரலாற்று வெற்றியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார். மறுபுறம், 19 வயதான இளம் புயல் லமின் யமால், கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் தனது சொந்த சாம்ராஜ்யத்தை நிறுவக் காத்திருக்கிறார். ஏதோ ஒரு சாதாரண தொண்டு நிறுவன நிகழ்வில் தொடங்கி, இன்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு வளர்ந்துள்ள மெஸ்ஸி – யமாலின் இந்த பிணைப்பு, கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் நம்ப முடியாத அதிசயக் கதையாக மாறியுள்ளது.