அர்பன் கம்பெனி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர், தனது சக ஊழியருக்கு வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டில் நேர்ந்த மோசமான அனுபவத்தைப் பற்றி சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண் ஊழியர் வாடிக்கையாளரின் வீட்டிற்கு வேலைக்காகச் சென்றபோது, அங்கிருந்த கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் அதற்கு அனுமதி மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அந்த வாடிக்கையாளர் அந்த ஊழியருக்குப் மொபைல் ஆப்பில் 1-ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளார். அர்பன் கம்பெனி விதிமுறைகளின்படி குறைந்த ரேட்டிங் பெற்றதால், அந்த ஊழியர் அடுத்த 5 நாட்களுக்கு வேலை எதுவும் எடுக்க முடியாமல், வருமானம் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளார்.

“>

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கிக் தொழிலாளர்கள் தற்காலிக அல்லது ஒப்பந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளில் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இது குறித்துப் பதிவிட்ட ஊழியர், “வீட்டு உரிமையாளர் கொடுத்த 1-ஸ்டார் ரேட்டிங் காரணமாக, எனது தோழிக்கு அடுத்த 5 நாட்களுக்கு எந்த வருமானமும் கிடைக்காது. இயற்கை உபாதையைக் கழிக்க அனுமதி மறுப்பது எந்த வகையான மனிதநேயம்?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இணையவாசிகளிடையே இந்த விவகாரம் இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், “பணம் கொடுத்துவிட்டதால் ஊழியர்களைத் தங்களின் வேலைக்காரர்களைப் போல வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள் இந்தியாவில் உழைப்பாளர்களுக்கான சமத்துவமும் மரியாதையும் மிக அவசரமாகத் தேவை” என்று ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

மற்றொரு தரப்பினரோ, “தனிநபர் சுகாதாரம் என்பது அவரவர் உரிமை, வாடிக்கையாளர் தங்கள் வீட்டு கழிவறையை அந்நியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நினைப்பதில் தவறில்லை; ரேட்டிங் குறைக்கப்பட்டதற்குக் காரணம் அங்கு நடந்த தவறான பேச்சுகளாக இருக்கலாம்” என்று வாடிக்கையாளரின் பக்கமும் பேசியுள்ளனர்.