மே 2025-ல் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன அமைப்பான சிந்து பேசின் நீர்ப்பாசன அமைப்பு’ அந்நாட்டின் உணவு உற்பத்தியில் 90 சதவீதத்திற்கு மேலான பங்களிப்பை வழங்குகிறது.

தற்போது தண்ணீர் வரத்து மிகக் கடுமையாகக் குறைந்துள்ளதால், கோதுமை, அரிசி மற்றும் கரும்பு போன்ற முக்கிய பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மராலா அணையில் நீர்வரத்து வழக்கத்தை விட 95 சதவீதம் வரை சரிந்துள்ளதால், லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

1960-ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீர் பங்கீட்டில் ஒரு முக்கியத் தூணாக இருந்து வந்தது. ஆனால், இந்தியா ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததுடன், நதிநீர் தொடர்பான தரவுகளைப் பகிர்வதையும் நிறுத்தியுள்ளது.

இதனால் பாகிஸ்தானின் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகாலத் திட்டமிடல் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்தால், அது பாகிஸ்தானில் கடும் உணவுப் பற்றாக்குறையையும், பொருளாதாரச் சிக்கலையும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

தெற்காசியாவின் இந்த ஒப்பந்தம் தற்போதைய சூழலில் பெரும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.