நள்ளிரவில் ரேபிடோ பைக் புக் செய்த வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென்ற டிரைவருக்கு, அங்கு காத்திருந்த 7 வயது சிறுவனின் விசித்திரமான டீ குடிக்கும் ஆசையைக் கேட்டு பெரும் அதிர்ச்சியே மிஞ்சியது. யூனியன் பேங்க் ஏடிஎம் அருகே பிக்-அப் இடத்திற்கு வந்த ரேபிடோ டிரைவர், வாடிக்கையாளரைத் தேடி போன் செய்தபோது, அந்தப் பக்கமிருந்த சிறுவன் தான் இருக்கும் இடத்தை விவரிப்பதற்குப் பதிலாக, “என் பக்கத்தில் இரண்டு நாய்கள் குரைக்கின்றன” என்று மழலை மாறாமல் லேண்ட்மார்க் கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த டிரைவர், “தம்பி, நீ இந்த இடத்திற்குப் புதியவனா?” என்று கேட்க, அந்தச் சிறுவனோ, “எனக்கு 7 வயதுதான் ஆகிறது” என்று கூலாகக் கூறவே டிரைவர் அப்படியே உறைந்துபோனார்.

நள்ளிரவு 1 மணிக்கு எதற்காக பைக் புக் செய்தாய் என்று டிரைவர் அதிரடிக் கேள்வி கேட்க, “எனக்கு இந்த நேரத்தில் டீ குடிக்க ஆசையாக இருக்கிறது, அதான் புக் செய்தேன்; அப்பா, அம்மா எல்லாரும் தூங்குகிறார்கள், நான் பைக் புக் செய்தது அவர்களுக்குத் தெரியாது” என்று அந்தச் சிறுவன் கொடுத்த பதில் டிரைவரை வாயடைக்க வைத்தது.

 அவரிடம் கெஞ்சியும் அவசரமாகவும் வரும்படி சிறுவன் வற்புறுத்தியும், அந்த நள்ளிரவு நேரத்தில் சிறுவனைத் தனியாக அழைத்துச் செல்ல அந்த ரேபிடோ ரைடர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஒருகட்டத்தில் அந்தச் சிறுவன் டிரைவரைப் பார்த்து “அறிவில்லாதவன்” என்று திட்டியபோதும், கோபப்படாமல் அமைதி காத்த டிரைவர், “உனக்கு வெறும் 7 வயதுதான் ஆகிறது, நீ இருக்கும் இடத்தைக்கூட உன்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை, இந்த நள்ளிரவில் உன்னைத் தனியாக அழைத்துச் செல்ல முடியாது” என்று பக்குவமாக எடுத்துரைத்தார்.

அதோடு நிறுத்தாமல், உடனடியாகப் போய் தூங்கிக் கொண்டிருக்கும் பெற்றோரை எழுப்பும்படி அறிவுறுத்திவிட்டு, பெற்றோரின் அனுமதியின்றி குழந்தையை அழைத்துச் செல்ல முடியாது எனக் கூறி அந்தச் சவாரியை ரத்து செய்தார். சவாரி காசை விடக் குழந்தையின் பாதுகாப்பே முக்கியம் என நினைத்துச் செயல்பட்ட அந்த ரேபிடோ டிரைவரின் சமயோசித புத்தியைப் பாராட்டி, இந்த சுவாரசியமான உரையாடல் வீடியோவை இணையவாசிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.