ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை தங்கள் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கும் என்று பாகிஸ்தான் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானைக் கறிவேப்பிலையாகத் தூக்கி எறிந்துவிட்டு, தங்களின் முக்கிய கூட்டத்திற்கு சுவிட்சர்லாந்து நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் பாகிஸ்தான் ராணுவம், அரசு மற்றும் அங்குள்ள ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவாளரும், அரசியல் முககருத்துக்கணிப்பாளருமான நஜம் சேதி இதுகுறித்துத் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகக் கொட்டியுள்ளார். கத்தாரை முன்னிலைப்படுத்துவதற்காக, ஈரான் நாடு பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய எந்தவொரு நற்பெயரையும்  கொடுக்க மறுத்துவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நஜம் சேதி மேலும் கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தங்களுக்குப் பங்கு இருக்க வேண்டும் என கத்தார் விரும்பியதாகவும், ஈரானும் தனது எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளுக்குப் பாகிஸ்தானை விட கத்தாரே பெரும் பங்கு வகிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரான் பெற நினைக்கும் 300 பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் கத்தாரில் முடக்கப்பட்டிருக்கும் ஈரானின் 6 பில்லியன் டாலர் சொத்துக்கள் ஆகிய காரணங்களால் ஈரான் கத்தாரை நோக்கிச் சாய்ந்துள்ளது.

இதனால் கத்தார் பிரதமர் சுவிட்சர்லாந்து செல்லும் வேளையில், பாகிஸ்தானுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் மொஹ்சின் நக்வி ஆகியோரும் சுவிஸ் பறந்துள்ளனர். எனினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தங்களின் முதன்மைத் தேர்வாக இருக்காது என ஈரானின் உயர்மட்டப் பிரதிநிதி அப்துல்லா ஹாஜி சாதேகி கூறியுள்ளது இந்த மாநாட்டின் வெற்றி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.