ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மது பாட்டில்கள் ஏற்றிய சரக்கு வாகனம் ஒன்று, திடீரென டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கர விபத்தின் காரணமாக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ஏராளமான மது பாட்டில்கள் நாலாபுறமும் சாலையில் சிதறி ஓடின. இதனைப் பார்த்த உடனே விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஓடி வருவதை விடுத்து, அந்தப் பகுதி மக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் திரண்டு சென்று, சாலையில் சிதறிக் கிடந்த மது பாட்டில்களை போட்டி போட்டுக் கொண்டு கைகளில் அள்ளிக் கொண்டு தப்பியோடினர்.

இந்த விநோத கொள்ளைச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

பின்னர் இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து போக்குவரத்தை முழுமையாகச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதோடு, இந்த விபத்து மற்றும் மது பாட்டில்கள் திருடப்பட்ட விவகாரம் குறித்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.