விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2026 தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி, பிளே-ஆஃப் சுற்றுக்கான தங்களது வாய்ப்பை ராஜஸ்தான் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த வாழ்வா-சாவா போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான துவக்கம் தந்தனர். குறிப்பாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது நிதானமான அரைசதத்தை பதிவு செய்த வைபவ், அதனை எட்ட எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 23 மட்டுமே! சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து, துரதிர்ஷ்டவசமாக சதத்தை தவறவிட்டார். எனினும், அவரது இந்த ஒற்றை ஆட்டம் லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலுமாக பறித்தது. இறுதியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டிப்பிடித்தது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசாத்தியமான ஆட்டத்தைக் கண்டு வியந்த முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும், விளையாட்டு வர்ணனையாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரைப் பாராட்டியுள்ளார்.

“ஏலியன்கள் (வேற்றுக்கிரகவாசிகள்) இருக்கிறார்களா என்ற விவாதம் மற்றும் மர்மங்களுக்குப் புகழ்பெற்றது ஏரியா 51 (Area 51). இனி அந்த விவாதத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம். ஏனெனில், நம்மிடையே வாழும் ஒரு சூப்பர் நேச்சுரல் நபர், இப்போது ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி நேரடித் தொலைக்காட்சியில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று அஸ்வின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நடப்புத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. கடைசி ஒரு இடத்திற்காக ஐந்து அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், ராஜஸ்தான் அணி பெற்றுள்ள இந்த வெற்றி அந்த அணியின் பிளே-ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைத்துள்ளது.