மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஒரு நூலகத்திற்குள் புகுந்த மர்மக் கும்பல், அங்கிருந்த மூன்று மாணவர்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரகேஸ்வரி காலனியில் உள்ள ‘குரு நூலகத்தில்’ கடந்த சனிக்கிழமையன்று நாற்காலியை நகர்த்துவது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே ஒரு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, திங்கள்கிழமையன்று மதியம் 2 மணியளவில் அனில் தாக்கூர், யுவராஜ் தாக்கூர், அங்குஷ் யாதவ் மற்றும் முகமூடி அணிந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நூலகத்திற்குள் அதிரடியாகப் புகுந்துள்ளனர்.

அங்கு படித்துக்கொண்டிருந்த பிரதீப் என்ற மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த தடிகளாலும் கைகளாலும் அவரை இரக்கமின்றித் தாக்கியுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் பிரதீப்பின் தலை மற்றும் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது சண்டையைத் தடுக்க முயன்ற சோட்டு குர்ஜார், தீபக் குஷ்வாஹா என்ற மற்ற இரு மாணவர்களையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

“>

 

இந்த மொத்த வன்முறைச் சம்பவமும் நூலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரிந்த மூன்று பேர் மற்றும் அடையாளம் தெரியாத 15 இளைஞர்கள் மீது தேஹாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.