பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மத்திய சிறையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நசீப் சிங் என்ற விசாரணைக் கைதி, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈ-ரிக்ஷாவில் அழைத்துச் செல்லப்பட்டபோது, கயிறால் பிணைக்கப்பட்டிருந்த சீனியர் கான்ஸ்டபிள் ஜஸ்தீப் சிங்கை, நசீப் சிங் திடீரென கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே குறுகிய தெருவில் சினிமா பாணியில் பயங்கர மல்லுக்கட்டு ஏற்பட்டு, இருவரும் கீழே விழுந்து புரண்டனர்.

ஆஸ்துமா நோயாளியான கான்ஸ்டபிள் ஜஸ்தீப் சிங் படுகாயமடைந்த நிலையிலும், கைதி தப்பிவிடக் கூடாது எனப் போராடியபோது, கைதி நசீப் சிங் போலீஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.

இந்த கடுமையான மோதலின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், குண்டு பாய்ந்து கைதி நசீப் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய இந்த கைதி, போலீஸை தாக்கிவிட்டு தப்ப முயன்ற இந்த ஒட்டுமொத்த நடுக்கமூட்டும் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

காயமடைந்த போலீஸ் அதிகாரிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.