2025-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தனது “சுங்கவரி அச்சுறுத்தல்” மூலம் மட்டுமே தணித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு அதிரடி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு அணு ஆயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த போது, நீங்கள் சண்டையை நிறுத்தவில்லை என்றால் 200 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டினேன்; அந்தப் பொருளாதார அச்சுறுத்தலால் தான் இரு நாடுகளும் பின்வாங்கின” எனத் தனது பாணியில் பெருமை பொங்கக் கூறியுள்ளார். மேலும், தனது இந்த முயற்சியால் சுமார் 50 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், பாகிஸ்தான் தலைமையே தன்னை பாராட்டியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“>

இருப்பினும், டிரம்பின் இந்த “சுய தம்பட்டத்தை” இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்துர்’ (Operation Sindhur) நடவடிக்கையைத் தொடர்ந்தே பாகிஸ்தான் பணிந்ததாக இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர்கள் (DGMO) இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையின் முடிவிலேயே போர் நிறுத்தம் எட்டப்பட்டதே தவிர, டிரம்பின் வரி மிரட்டலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என இந்திய அதிகாரிகள் தரப்பில் அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்தக் கூற்று தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும், சமூக வலைதளங்களில் கிண்டல்களையும் கிளப்பியுள்ளது.