மகாராஷ்டிரா மாநிலம் கார்கர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

23-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னலுக்கு வெளியே, மிகவும் ஆபத்தான உயரத்தில் ஏசியின் வெளிப்புற யூனிட் (Outdoor Unit) பொருத்தப்பட்டிருந்தது. அந்த ஏசி பழுதடைந்ததால், அதைச் சரிசெய்ய ஒரு மெக்கானிக் அழைக்கப்பட்டுள்ளார்.

அந்த இடத்தைப் பார்த்த மெக்கானிக், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வேலையைச் செய்ய மறுத்துவிட்டார். “வெறும் 300 அல்லது 400 ரூபாய் கூலிக்காக, எந்தப் பாதுகாப்பு வசதியும் இல்லாமல் 23-வது மாடியில் தொங்கியபடி என் உயிரைப் பணையம் வைக்க முடியாது” என்று அவர் கறாராகக் கூறியுள்ளார். அவர் அந்த இடத்தைப் படம் பிடித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “அந்தத் தம்பி எடுத்தது மிகச் சரியான முடிவு. உயிர் விலைமதிப்பற்றது” எனப் பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம், இவ்வளவு உயரத்தில் ஏசி மெக்கானிக்குகள் வேலை செய்யும்போது உரிய பாதுகாப்பு கயிறுகள் (Safety Harness) மற்றும் உபகரணங்களை ஏன் பயன்படுத்துவதில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டும் பில்டர்கள், ஏசி யூனிட்களைப் பராமரிக்க முறையான இடவசதி செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டையும் பலர் முன்வைத்து வருகின்றனர்.