சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள டெகே கவுண்டி பகுதியில், சுமார் 4 மீட்டர் (13 அடி) ஆழமுள்ள ஆழமான குப்பைத் தொட்டி ஒன்றில் பழுப்பு நிற கரடி ஒன்று தவறி விழுந்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு மிக அருகில் இந்த குழி இருந்ததால், தகவலறிந்து வந்த போலீசார் முன்னெச்சரிக்கையாக மக்களை அப்புறப்படுத்தினர்.

வெளியே வர முடியாமல் கரடி குழியின் செங்குத்தான சுவர்களில் ஏறிச் சறுக்கி கீழே விழுந்த காட்சி அங்கிருந்தவர்களை பதற வைத்தது. உடனடியாகப் போலீசாரும் கிராம மக்களும் இணைந்து மரக்கட்டைகளைக் கொண்டு ஒரு பலமான ஏணியைத் தயாரித்துக் குழிக்குள் இறக்கினர். முதலில் பயத்தில் கரடி ஏணியைத் தள்ளிவிட்டாலும், சாமர்த்தியமாகச் செயல்பட்ட மீட்புக் குழுவினர் இரண்டாவது ஏணியை இன்னும் உறுதியாகப் பொருத்தினார்கள்.

 

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த ஏணியின் உதவியுடன் லாவகமாக ஏறி வெளியே வந்த கரடி, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் மின்னல் வேகத்தில் காட்டை நோக்கி ஓடியது. சீனாவில் இரண்டாம் நிலை பாதுகாக்கப்பட்ட வனவிலங்காகக் கருதப்படும் இந்தக் கரடி, உணவைத் தேடி வந்தபோது குழியில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.