ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 பெண்களை தனது கோரிக்கையை ஏற்று ஈரான் அரசு விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “இது ஒரு மிகச்சிறந்த செய்தி, ஈரான் தலைவர்கள் எனது கோரிக்கையை மதித்ததற்கு நன்றி” என டிரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்தத் தகவலை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளதோடு, டிரம்ப் அப்பட்டமான பொய்யைப் பரப்புவதாகக் கடுமையாகச் சாடியுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவே இல்லை என்றும், சிலர் ஏற்கனவே விடுதலையாகிவிட்டதாகவும் ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. ​இந்த விவகாரத்தில் ஒரு படி மேலே சென்ற சவுதி அரேபியாவிற்கான ஈரான் தூதரகம், டிரம்ப்பை வெளிப்படையாகக் கேலி செய்து பதிவிட்டுள்ளது. டிரம்ப் குறிப்பிட்ட அந்த 8 பெண்களும் நிஜமானவர்கள் அல்ல, அவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என்றும், “AI மனிதர்களைக் காப்பாற்றிய டிரம்பிற்கு வாழ்த்துகள்” என்றும் கிண்டலாகத் தெரிவித்துள்ளது.

“சாட் ஜிபிடி-க்கு நன்றி” என பதிவிட்டு AI மூலம் உருவாக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களையும் ஈரான் தூதரகம் பகிர்ந்துள்ளது. ஒருபுறம் வெள்ளை மாளிகை டிரம்பின் மனிதாபிமான செயலைப் பாராட்டி வரும் நிலையில், ஈரான் அதனை ஒரு கற்பனைத் கதை என விமர்சித்து வருவது சர்வதேச அரசியலில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.