இலங்கையின் கடற்கரைப் பகுதிகளில் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் ‘ஸ்டில்ட்’ (Stilt) மீனவர்கள், பொது இடத்தில் புகைப்படம் எடுத்ததற்காகத் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையின் தென் கடலோரப் பகுதிகளில் கம்புகளில் அமர்ந்து மீன்பிடிக்கும் முறை உலகப்புகழ் பெற்றது. இதைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவது வழக்கம். இந்நிலையில், பொதுக் கடற்கரை ஒன்றில் தத்ரூபமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மீனவர்கள், தங்களைப் புகைப்படம் எடுத்ததற்குப் பணம் தர வேண்டும் எனக் கேட்டு அப்பயணியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். இது ஒரு திட்டமிடப்பட்ட ‘ஸ்கேம்’ (Scam) என அந்தப் பயணி சமூக வலைதளங்களில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அந்தச் சுற்றுலாப் பயணி கூறுகையில், கடற்கரை என்பது ஒரு பொதுவான இடம். அங்கு இயற்கை எழிலுடன் மீன்பிடிக்கும் மீனவர்களைப் படம் பிடித்தேன். ஆனால், அவர்கள் அதை ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு, புகைப்படம் எடுத்தவுடன் என்னிடம் வந்து கட்டாயப்படுத்திப் பணம் கேட்கிறார்கள். இது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

 

மீனவர்களின் இந்தச் செயல் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் இது மீனவர்களின் வாழ்வாதாரம் என்றும், அவர்களை ஒரு காட்சிப் பொருளாகப் பயன்படுத்தும்போது அதற்குரிய தொகையைத் தருவதில் தவறில்லை என்றும் கூறுகின்றனர்.

மற்றொரு தரப்பினரோ, சுற்றுலாப் பயணிகளை இது போன்ற செயல்கள் அச்சுறுத்தும் என்றும், நாட்டின் சுற்றுலா நற்பெயருக்கு இது களங்கம் விளைவிக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை சுற்றுலாத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.