சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல சண்டை வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சண்டைக்கு நடுவே ஒரு நபர் காட்டிய தொழில் பக்தி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு பழக் கிடங்கில் பணிபுரியும் இரு நபர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கியும், கீழே தள்ளி மல்லுக்கட்டியும் கொள்கின்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
View this post on Instagram
சண்டை உச்சகட்டத்தில் இருந்தபோது, ஒரு நபர் மற்றவரைப் பிடித்துத் தள்ளுகிறார். அப்போது அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழப் பெட்டிகள் சரிந்து கீழே விழப் பார்த்தன. அடுத்த நொடி ஆச்சரியப்படும் விதமாக, சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த நபர், ஆப்பிள்கள் கீழே விழுந்து வீணாகிவிடுமோ என்ற பயத்தில் சண்டையை ஒரு நிமிடம் ‘பாஸ்’ (Pause) செய்தார். உடனடியாகச் சரிந்து விழுந்த பெட்டிகளைச் சீர் செய்துவிட்டு, பழங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த அடுத்த வினாடியே, மீண்டும் தனது சண்டையைத் தொடர்ந்தார்.
மேலும் “எந்தச் சூழ்நிலையிலும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இவரே சாட்சி” எனச் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. “சண்டை முக்கியம்தான், ஆனா ஆப்பிள் பெட்டி அதைவிட முக்கியம்” என நெட்டிசன்கள் இந்த நபரின் ‘பொறுப்புணர்வை’ கிண்டலாகவும், வியப்பாகவும் பாராட்டி வருகின்றனர்.
