19-வது ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. குவஹாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சென்னை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவதற்குள்ளேயே சென்னை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சீசனில் சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்குவதற்காக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னை அணி வர்த்தகம் (Trade) செய்தது. இதன் மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸிற்கு ஜடேஜா திரும்பினார்.

 

நேற்றைய போட்டியில் சென்னைக்கு எதிராகப் பந்துவீசிய ஜடேஜா, தனது சுழற்பந்து வீச்சால் சிஎஸ்கே-வை நிலைகுலையச் செய்தார். ஆட்டத்தின் 7.2-வது ஓவரில் சர்பராஸ் கானை ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் (7.6 ஓவர்) அதிரடி வீரர் சிவம் துபே விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் சிவம் துபேயின் விக்கெட்டை ரவி பிஷ்னோய் கேட்ச் பிடித்தவுடன், ஜடேஜா வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் இந்த ஆக்ரோஷமான கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.