சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் 62 வினாடி வீடியோ ஒன்று குளிர்பான பிரியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மிகவும் அசுத்தமான சூழலில், பழைய பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தி, தரம் குறைந்த திரவங்களைக் கொண்டு போலி சோடாக்கள் தயாரிக்கப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. பெப்சி போன்ற முன்னணி நிறுவனங்களின் கிரேட்டுகள் (Crates) அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், ஒரிஜினல் போலவே போலி பானங்களைச் சந்தையில் உலவ விடுவது உறுதியாகியுள்ளது. இந்த வீடியோ மார்ச் 17 அன்று வைரலான நிலையில், அதில் உள்ள அடையாளங்களைக் கொண்டு இது பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா அல்லது லாகூர் பகுதியில் நடந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.

​இந்த விவகாரம் வெறும் வீடியோவாக மட்டுமன்றி, பொதுமக்களின் உடல்நலத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத இத்தகைய போலித் தயாரிப்புகளை அருந்துவதால் உயிருக்கே ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் நடந்ததாகத் தெரிந்தாலும், உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் குளிர்பானங்களை வாங்கும் போது பேக்கேஜிங், ஹோலோகிராம் மற்றும் பேட்ச் கோடுகளை (Batch Codes) மக்கள் முறையாகச் சரிபார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.