அமெரிக்காவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் சார்லி எவன்ஸ் என்பவர், இந்திய மருத்துவ முறை மேற்கத்திய நாடுகளை விட மிகவும் சிறந்தது (Far Superior) என்று பாராட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 148 நாட்களாகப் பயணம் செய்து வரும் எவன்ஸ், ராஜஸ்தானில் இருந்தபோது தனக்குத் தொண்டை வலி (Strep throat) ஏற்பட்டதாகவும், அப்போது இந்தியாவில் மருத்துவ வசதிகளைப் பெறுவது எவ்வளவு எளிது என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ‘யோகி காந்திகா’ (Yogi Kanthika) போன்ற ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் இந்திய நண்பர்கள் கொடுத்த மூலிகை மருந்துகள் அமெரிக்காவில் கிடைப்பதில்லை என்றும், அவை தன்னை மிக விரைவாகக் குணப்படுத்தியதாகவும் அவர் வியப்புடன் கூறியுள்ளார்.

இந்தியாவில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கோ அல்லது மருந்தகத்திற்கோ செல்லாமலேயே வீட்டு வைத்தியங்கள் மூலமே குணமடைய முடியும் என்பது ஒரு பெரிய ‘கண் திறப்பாக’ (Eye-opener) இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு மற்றும் சிகிச்சைக்காகச் செலவிடப்படும் பெரும் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகக் குறைந்த செலவில், காத்திருக்கத் தேவையின்றி உடனடியாகத் தரமான சிகிச்சை கிடைப்பது இந்திய மருத்துவத்தின் தனிச்சிறப்பு என அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும், “இந்தியாவில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, அல்லோபதி என அனைத்துமே மலிவாகவும் தரமாகவும் கிடைக்கிறது” என அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.