கொல்கத்தாவை சேர்ந்த 18 வயது மாணவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தபோது, அங்கிருந்த இரும்பு வேலியின் கூர்மையான ஈட்டி முனைகள் அவரது கையைத் துளைத்தன. அந்த இரும்பு வேலி உடைந்ததால், கையில் குத்தியிருந்த அந்தப் பெரிய இரும்புத் துண்டோடு மாணவர் தரையில் கிடந்தார்.

வலியால் துடித்த அவரை, அந்த இரும்புப் பகுதியோடு சேர்த்து அப்படியே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அந்த மாணவனின் கையில் சிக்கியிருந்த அந்தப் பாரமான இரும்பு வேலியைப் பிரித்து எடுப்பது மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது.

இரும்பை வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் நெருப்புப் பொறிகளும், வெப்பமும் மாணவனின் கையைப் பொசுக்கிவிடும் என்று அவர்கள் பயந்தனர். எனவே, மருத்துவமனையின் மெக்கானிக்குகளை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் இரும்பை வெட்டும்போது சூடு தெரியாமல் இருக்க, தொடர்ந்து குளிர்ந்த நீரையும், தீயணைப்பு நுரையையும் மாணவனின் கையில் ஊற்றிக்கொண்டே மிகக் கவனமாக அந்த இரும்புப் பகுதியை வெட்டித் தனியாக எடுத்தனர்.

இந்தக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு, மாணவர் அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது கையில் ஆழமாகப் பதிந்திருந்த ஈட்டி முனைகளை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். கீழே விழுந்ததில் அவரது மற்றொரு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அந்த மாணவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் அவர் முழுமையாகக் குணமடைவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.