கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ஒரு பயணி செய்த காரியம் இப்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அசாம் மாநிலம் காமாக்யாவுக்கு தனது குடும்பத்துடன் பயணிக்க வந்த ஒரு நபர், ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது ஒரு கப் டீ குடிப்பதற்காக கீழே இறங்கியுள்ளார்.

வந்தே பாரத் ரயில்கள் தானியங்கி கதவுகள் (Automatic Doors) கொண்டவை என்பதால், கதவுகள் மூடிக்கொள்ள ரயில் மெல்ல நகரத் தொடங்கியது. இதைப் பார்த்து பதறிப்போன அந்த நபர், ரயிலை நிறுத்தக் கோரி சைகை செய்ய, அங்கிருந்த ஆர்.பி.எஃப் (RPF) அதிகாரி லோகோ பைலட்டுக்கு சிக்னல் கொடுத்து ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து அந்த நபர் ரயிலில் ஏறினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “ஒரு தனிநபரின் அஜாக்கிரதைக்காக ஒட்டுமொத்த ரயிலையும் நிறுத்துவதா? இது என்ன அரசு பஸ்சா?” என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஒரு சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் இயங்கும் அதிவேக ரயில்களில் இதுபோல பொறுப்பற்று நடக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஆர்.பி.எஃப் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.