சமூக வலைதளங்களில் நாம் பார்ப்பது எல்லாம் உண்மையா? என்ற மிகப்பெரிய கேள்வியை பெங்களூருவைச் சேர்ந்த யூடியூபர் இஷான் சர்மா (Ishaan Sharma) தனது ஒரு வீடியோ மூலம் எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் இஷான் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது முகம் திடீரென டெய்லர் ஸ்விஃப்ட், நிர்மலா சீதாராமன், ஷாருக்கான் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் என மின்னல் வேகத்தில் மாறுகிறது.

“இனி சோஷியல் மீடியாவில் எதையும் நம்பாதீர்கள், நான் எனது முகம், குரல், பாலினம் என எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும்” என்று கூறி ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் ஆபத்தை அவர் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் ‘கதர்’ கிளப்பி வரும் நிலையில், மத்திய அரசு தற்போது இதற்கு ஒரு அதிரடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய ஐடி (IT) விதிகளின்படி, AI மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் “இது AI மூலம் உருவானது” என்ற லேபிள் (Label) கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும், சட்டவிரோதமான அல்லது தவறான AI வீடியோக்களை அகற்ற அரசு உத்தரவிட்டால், வெறும் 3 மணி நேரத்திற்குள் அந்த வீடியோவை சமூக வலைதள நிறுவனங்கள் நீக்க வேண்டும். இனி டிஜிட்டல் உலகில் பொய்களைப் பரப்புபவர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’ தான் என நெட்டிசன்கள் இந்த முடிவை வரவேற்று வருகின்றனர்.