நாடாளுமன்ற மக்களவையில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டு ஆவேசமாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடந்துகொண்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியதுடன், இது தொடர்பான வீடியோவையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Congress Party is proud of the most degrading behavior by their MPs !! If we had not stopped all BJP MPs and allowed the Women MPs to confront Cong. MPs, it would have led to very ugly scene.
We have very high consideration, to protect the dignity & sanctity of the Parliament. https://t.co/tRj5HjLKFH pic.twitter.com/aTmktk4Y7E— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2026
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமரின் இருக்கை அருகே அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பிரதமரை அவைக்கு வர வேண்டாம் எனத் தான் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் முழக்கங்களால் அவையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, பிரதமரின் உரையின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பொறுமை காக்க அறிவுறுத்தப்பட்டதாகவும், இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும் என்றும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் மோதல்கள் தில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
