மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், நாடாளுமன்றத்தில் இன்று தனது முதல் உரையை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். தான் சினிமா துறையிலிருந்து வந்தாலும், அண்ணா, பெரியார், காந்தி ஆகியோரைத் தனது வழிகாட்டிகளாகக் கொண்டு பகுத்தறிவுப் பாதையில் நடப்பவன் என்று குறிப்பிட்ட கமல், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்தும் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தனது உரையின் சிகரமாக, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் தன்மானம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள் அவையையே அதிரவைத்தன. “தமிழ் மொழி பிச்சை எடுக்கவோ, திருடவோ உதவாது; தமிழன் எக்காலத்திலும் பிச்சை எடுக்க மாட்டான், குறிப்பாக உங்கள் பிச்சையை ஒருபோதும் ஏற்க மாட்டான்” என்று ஆவேசமாகப் பேசினார். மேலும், “ஓட்டையும் விற்கமாட்டான், நாட்டையும் விற்கமாட்டான் இந்த கமல்ஹாசன்” என்று அவர் முழங்கியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உரையை “நாளை நமதே” என்று முடித்த கமல்ஹாசன், தான் ஒரு தமிழனாகத் தனது உரிமைகளுக்காக எப்போதும் நெஞ்சை நிமிர்த்திப் போராடுவேன் என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளார்.
