சீனாவைச் சேர்ந்த அஜிபாட் ஏ2 என்ற மனித உருவ ரோபோ, மூன்று நாட்களில் சுமார் 106 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சுசோ நகரில் தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி ஷாங்காய் வரை நீடித்த இந்தப் பயணத்தின் போது, இந்த ரோபோ சாலைகள், பாலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளைத் தானாகவே கடந்து சாதனை புரிந்தது.

ஒரு மனித உருவ ரோபோ இடைவிடாமல் இவ்வளவு தூரம் நடந்து கடப்பது இதுவே முதல்முறை என்பதால், கின்னஸ் அமைப்பு இதனை நீண்ட தூரம் நடந்த மனித உருவ ரோபோ என்ற பிரிவில் அங்கீகரித்துள்ளது.

 

குறிப்பாக, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, பகல் மற்றும் இரவு நேரங்களில் எவ்வித மனித உதவியும் இன்றி 106.286 கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்த இந்த ரோபோவின் செயல் தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.