கர்நாடகாவின் நெடுஞ்சாலைகளிலும், நகரப் பகுதிகளிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில், பெரிய கண்களுடன் கூடிய ஒரு பெண்ணின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கவனித்துள்ளார். பல இடங்களில் இந்தப் புகைப்படம் தென்பட்டதால் ஆர்வமடைந்த அவர், ‘கூகுள் லென்ஸ்’ மூலம் தேடியும் சரியான விடை கிடைக்கவில்லை. இறுதியில் அவர் இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட, சுமார் 3.2 மில்லியன் மக்கள் இதைப் பார்த்துவிட்டு, “நாங்களும் இதை கவனித்துள்ளோம், யார் இவர்?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினர்.



இறுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் இந்த மர்மம் விலகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த நிஹாரிகா ராவ் என்ற யூடியூபர் (YouTuber). 2023-ல் அவரது வீடியோ ஒன்றில் அவர் கொடுத்த விசித்திரமான முகபாவனை சமூக வலைதளங்களில் மீம் (Meme) ஆக மாறியுள்ளது. அந்தப் புகைப்படத்தின் தீவிரமான பார்வையை மக்கள் சுவாரஸ்யமாகக் கருதி, புதிய வீடுகளுக்கு ‘திருஷ்டி பொம்மை’ போல பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தீய கண்கள் படாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பொம்மைகளுக்குப் பதிலாக, இந்த ‘மீம்’ புகைப்படத்தை ஒரு நவீன திருஷ்டிப் பரிகாரமாக மக்கள் மாற்றிவிட்டனர்.