இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது தலித் மாணவி, ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அந்த மாணவி, தனது மரணத்திற்கு முன்னதாகப் பதிவு செய்த உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், புவியியல் துறை உதவிப் பேராசிரியர் அசோக் குமார் தன்னைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகவும், மூன்று சீனியர் மாணவிகள் தன்னை ராகிங் செய்து கொடூரமாகத் தாக்கியதுடன், இது குறித்து வெளியில் சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டியதாகவும் அந்த மாணவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட மூன்று சீனியர் மாணவிகள் மீது ராகிங் தடுப்புச் சட்டம் மற்றும் தாக்குதல் நடத்திய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் உத்தரவைத் தொடர்ந்து கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, பல்கலைக்கழக மானியக் குழு இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்துள்ளதுடன், உண்மைகளைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.