திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த குட்டாடி திருப்பதி (Kuttadi Tirupati) என்ற வாலிபர், மது போதையில் கோயில் மதில் சுவரைத் தாண்டி உள்ளே புகுந்துள்ளார்.

அங்கிருந்த பாதுகாப்புப் படையினரின் கண்களில் படாமல் தப்பித்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் கோயிலின் பிரம்மாண்ட கோபுரத்தின் மீது விறுவிறுவென ஏறியுள்ளார்.

கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த நபர், அங்குள்ள புனிதமான கலசத்தை அகற்ற முயற்சித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் ஏணிகள் மூலம் அவரை மீட்க முயன்றனர்.

போலீசார் அவரை கீழே இறங்கி வரும்படி கெஞ்சியபோது, அந்த ஆசாமி ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார். “எனக்கு இப்போவே ஒரு குவார்ட்டர் பாட்டில் சரக்கு வேணும், அதை கொடுத்தா தான் கீழே வருவேன்” என அவர் அடம்பிடித்ததைக் கேட்டு போலீசார் வாயடைத்துப் போயினர்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ள எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசை கடுமையாகச் சாடியுள்ளது.

“திருப்பதி போன்ற புனிதமான நகரை மது கூடாரமாக மாற்றிவிட்டனர். கோயிலின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த மெத்தனத்திற்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்” என அந்தத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பை மீறி ஒருவர் எப்படி கோபுரம் வரை சென்றார் என்பது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.