தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் லிங்காப்பூர் கிராமத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பாஞ்ச் கும்மாரி ரஞ்சித் என்பவர், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கரடி வேடமணிந்து குரங்குகளைத் துரத்திய வினோதச் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்ற இவர், தேர்தல் பிரசாரத்தின் போது கிராமத்தின் பெரும் பிரச்சினையாக இருந்த குரங்குகள் தொல்லையை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தார்.
NOT MONKEYING AROUND!!!
The man in the bear costume jumping around chasing monkeys is the newly elected sarpanch Kummari Ranjith from Lingapur village, Nirmal district, Telangana.
This young sarpanch from BRS promised to take care of the monkey menace in the village and looks… pic.twitter.com/7bK7Y1o52h
— Revathi (@revathitweets) December 19, 2025
அதன்படி, சமீபத்தில் முழுமையான கரடி உடையில் வயல்வெளிகளில் ஓடி, குரங்குகளைப் பயமுறுத்தித் துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கூண்டு வைத்துப் பிடித்தும் பலனில்லாததால், இணையதளத்தில் இது போன்ற ஒரு யோசனையைப் பார்த்துத் தாம் இம்முயற்சியில் இறங்கியதாக அவர் வியர்வையுடன் சிரித்தபடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் காடுகள் அழிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாகக் குரங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் மக்களையும் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தற்போது ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
கம்மம், கரீம்நகர், நிர்மல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இந்தத் தொல்லை மிக அதிகமாகக் காணப்படுகிறது. குரங்குகள் பயமின்றி வீடுகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களைத் திருடுவதோடு, குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கடித்துக் காயப்படுத்துகின்றன. கிராம மட்டத்தில் சர்பாஞ்ச் ரஞ்சித் மேற்கொண்ட இந்த வினோத முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தாலும், அரசு இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
