இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளதால், சுத்தமான காற்றைத் தேடி மக்கள் இமாச்சலப் பிரதேச மலைப்பகுதிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் கணவாயில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாகப் பனிப்பொழிவு அல்லது விடுமுறை காலங்களில் மட்டுமே காணப்படும் இத்தகைய கூட்டம், தற்போது பனிப்பொழிவு இல்லாத நிலையிலும், விடுமுறை நாட்கள் தொடங்காத சூழலிலும் காணப்படுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொலியில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்வதைக் கண்ட இணையவாசிகள், டெல்லியின் நச்சுப் புகையிலிருந்து தப்பிக்க மக்கள் மலைகளுக்குச் செல்வதையே இது காட்டுகிறது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதே சமயம், திட்டமிடப்படாத இத்தகைய சுற்றுலாப் பயணங்களால் மலைப்பகுதிகளின் மென்மையான சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அங்கேயும் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகச் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.