ICC பெண்கள் ஒரு நாள் உலகக் கோப்பை 2025 தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. வன்டே வடிவத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

 

இதில், வங்கதேச மகளிர் அணி மிகுந்த துடிப்புடன் விளையாடி வரும் நிலையில், ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘X’ உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த புகைப்படத்தில், 2 பெண்கள் பர்தா அணிந்து கிரிக்கெட் விளையாடும் காட்சி உள்ளது.

இதில் ஒருவரிடம் பேட் இருப்பதும், பின்னணியில் “பங்களாதேஷ் vs நியூசிலாந்து – மகளிர் உலகக்கோப்பை 2025” என்ற ஸ்கோர்கார்டு போன்ற கிராபிக்ஸ் இருப்பதும் தோன்றுகிறது. இதனைப் பார்த்த பலரும், “உண்மையிலேயே உலகக் கோப்பையில் பர்தா போட்டு விளையாடுகிறார்களா?” என்ற சந்தேகத்துடன் இதை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் உண்மை இது அல்ல. அந்த புகைப்படம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேச அணி வீராங்கனைகள், மற்ற அனைத்து அணிகளைப் போலவே ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் விளையாடி வருகின்றனர். பர்தா அணிந்து விளையாடும் பெண்கள் எனும் வதந்திக்கு எந்தவித சாட்சியும் இல்லை.

இது தவறான தகவலை பரப்பி, வங்கதேச மகளிர் அணியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு போலி புகைப்படம் என்பதை சமூக ஊடக பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.