மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை நோக்கி இளைஞர் ஒருவர் “பறக்கும் முத்தம்” கொடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமை கடுமையான மோதலாக மாறியது. அந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது தார் மாவட்டத்தின் அம்ஜெரா பகுதியில் மூன்று இளைஞர்கள் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை நோக்கி ஆபாசமான சைகை செய்து, “பறக்கும் முத்தம்” கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், பைக்கை நிறுத்துமாறு கூறி இளைஞர்களை எதிர்கொண்டார்.

தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், இளைஞர்களை பைக்கிலிருந்து இழுத்து சாலையின் நடுவே கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், குடும்பத்தினர் கைகள் மற்றும் தடிகளால் இளைஞர்களை அடிப்பது தெளிவாகக் காணப்படுகிறது. வழிப்போக்கர்களும் அங்கு திரண்ட, சிலர் தங்கள் மொபைல் போன்களில் அந்தச் சம்பவத்தை பதிவு செய்தனர்.

தாக்கப்பட்ட இளைஞர்கள் பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால் சிறிஊஉ நேரத்திலேயே, மற்ற நண்பர்களுடன் மீண்டும் திரும்பி வந்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக சாலையில் பெரிய அளவில் மோதல் வெடித்து, இருதரப்பினரும் காயமடைந்தனர். மோதலின்போது, சிலர் கலப்பையால் தாக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

 

இந்தச் சம்பவம் அம்ஜெரா காவல் நிலைய வரம்புக்குள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இது பற்றி போலீசார் கூறியதாவது:

“இரு தரப்பினரிடையேயான மோதல் குறித்து 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என தெரிவித்தனர்.

காவல்துறையினர் மேலும், விசாரணையின் அடிப்படையில் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.