இன்றைய வேகமான வாழ்க்கைமுறையிலும், வேலைப் பணி, சமூக அழுத்தங்கள் மற்றும் மன அழுத்தங்களிலும் சிக்கிய இளம் தம்பதிகள், குடும்ப வாழ்க்கையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் தவறி, திருமண வாழ்க்கையை முடிக்க தயாராகிவரும் பிரச்னை பெருகி வருவதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக 30 வயதிற்கும் குறைவானவர் மத்தியில், விவாகரத்து தேர்வாக மாறிவிட்டது. சின்னச்சின்ன தகராறுகளுக்கே விட்டு கொடுக்காமல், கோபம், அகங்காரம், புரிதல் இன்மை ஆகிய காரணங்களால், சில மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தில் திருமணத்திற்கு உடனடியாகவோ, சில மாதங்களுக்குள்ளாகவோ விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆண்டுக்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், சுமார் 30,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவாகுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு, முந்தைய ஆண்டில் திருமணம் செய்த தம்பதிகளே, அடுத்த ஆண்டு விவாகரத்திற்கான மனுவை தாக்கல் செய்கின்றனர் என்பது ஆச்சரியமான தகவலாகும். இந்த விபரங்கள், ஒரு சமூக ஆர்வலரால் தகவலறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெற்றதின் அடிப்படையில் வெளியாகியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கூறும் போது, “புரிதலின்மை, தொடர்பு பற்றாக்குறை, சமூக ஊடகங்களில் மிகுந்த ஈடுபாடு, கோபம்  ஆகியவையே இளம் தம்பதிகளில் தற்காலிக மனோநிலை உருவாகுவதற்கு காரணமாகின்றன” என தெரிவித்துள்ளனர்.