சாதாரணமாக எங்கு தீ விபத்து ஏற்பட்டாலும் முதலாவது அழைக்கப்படும் சேவை தீயணைப்பு துறை தான். ஆனால், ஒரு டிரக் ஓட்டுநர் தன் வாகனத்தில் தீ ஏற்ப்பட்ட போது என்ன செய்தார் தெரியுமா?. நேராக தீயணைப்பு நிலையம் நோக்கி டிரக்கை ஓட்டிச் சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த 31 விநாடிகள் கொண்ட வீடியோ, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு சிரிக்கவும் வைத்திருக்கிறது.

 

வீடியோவில், டிரக்கின் பின் பகுதி வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது. இருந்தும் அந்த டிரைவர், எதையும் பொருட்படுத்தாமல் வேகமாக சாலையைக் கடந்து, நேராக அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றார். இதனை பார்த்து தாமதமின்றி ஓடிவந்த தீயணைப்பு பணியாளர்கள், சிறிது நேரத்திலேயே தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். ஒருவேளை இது வேறுவிதமாக நடந்திருந்தால், பெரும் சேதத்திற்கே வழிவகுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

இந்த வீடியோ தற்போது 3.78 லட்சம் பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று வைரலாகியுள்ளது. ஒரு நெட்டிசன், “இது தான் சீக்கிரமாக செட் பண்ணுற வழி, ஆனா ஓட்டும்போது காற்று தீயைக் கூட அதிகமா பரவ வைச்சிருக்கு!” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர், “இது தான் ஸ்மார்ட் சிந்தனையும் வேகமான செயல்பாடும்!” என பாராட்டியிருந்தார், ஒரு பிரபல கருத்தாளர், “இது மிகவும் சுயநலமான செயல், தன்னையும் பிறரையும் ஆபத்தில் தள்ளியிருக்கிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.