சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த திகுரான் என்றவர், நேற்று மாலை முட்டை வாங்கி வந்து, மனைவியிடம் முட்டைக் குழம்பு சமைக்கக் கேட்டுள்ளார். ஆனால், அன்றைக்கு ‘கரு பாத்’ விழா என்பதால், மறு நாளில் விரதம் இருக்க வேண்டிய மனைவி, முட்டை உணவு சமைக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவர், வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். திகுரான் தற்கொலைக்குச் சரியாக என்ன காரணம் என்பதையும், ஏதேனும் குடும்ப தகராறு இருந்ததா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

‘கரு பாத்’ என்பது சத்தீஸ்கரில் அனுசரிக்கப்படும் ஒரு முக்கியமான விரத நிகழ்வு. நர்ஜாலா விரதத்திற்கு முந்தைய நாளில் பெண்கள் பாகற்காய் உள்ளிட்ட கசப்பான உணவுகளைச் சேர்த்து சமைக்கும் கரு பாத் சாப்பாட்டை உணவருந்துவர். இது, கணவன் நீண்ட ஆயுளுடன் செழிப்பாக வாழ்வதற்காக நடத்தப்படும் ஒருவகை பரம்பரையாகும்.